''எனது தந்தை நிச்சயம் வெளியில் வருவார்..." ராஜித மகன் : 'பயம் இல்லாவிட்டால் எதற்கு பதுங்க வேண்டும்..?" என அரசாங்கம் கேள்வி



எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன  தெரித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் நேற்று (18.07.2025) கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

மனுதாரரின் சட்டத்தரணிகள் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை தனது தந்தை ராஜித் சேனாரத்ன கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படுவது உறுதி என சதுர சேனாரத்ன தெரிவித்திருந்தார்,

அத்துடன் இந்த அரசாங்கத்தை நாங்கள் நிச்சயமாக கவிழ்ப்போம். என் தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும் என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேநேரம் "எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும்." என ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவுக்கு அமைச்சர் சமந்த வித்யாரத்ன பதிலடி கொடுத்துள்ளார்.

 கைது பயத்திலேயே ராஜித பதுங்கி இருக்கக்கூடும். சிறைச்சாலையில் இருப்பதை விடவும் ஒளிந்திருப்பது கஷ்டமாகவே இருக்கும். அந்தக் கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டு வரட்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும்."என கூறியுள்ளார்.